எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர் வளாகத்தில் (13/02/2016)
நடைபெற்ற சிறப்புப் பட்டமளிப்பு விழாவில் உலகிலுள்ள மிகப்பெரிய மோட்டார் சைக்கிள் நிறுவனங்களில்
ஒன்றான ‘‘ஹீரோ மோட்டோ கார்ப்’’ நிறுவனத்தின் இணை மேலாண்மை இயக்குநரான திரு. சுனில்
கந்த் முஞ்சால் அவர்களுக்கு கல்வி, மனித நேயம், வணிகத்துறை மேம்பாடு ஆகியவற்றில் அவர்
ஆற்றிய தொண்டிற்காக டி.லிட் எனும் முதுமுனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
இச்சிறப்புப் பட்டமளிப்பு விழாவில் டி.லிட்.பட்டத்தினை ஏற்றுக்கொண்டு பேசுகையில்
இந்தியாவின் பொருளாதாரம் அதிக அளவில் அந்நிய நாடுகளை சார்ந்திருக்கும் நிலை மாறி உள்நாட்டு
உற்பத்தியினை சீர்படுத்துவது அவசியம். அப்போதுதான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை
மட்டுமல்லாமல் கலை மற்றும் மானுடவியல் புலங்களில் ஆய்வறிஞர்களையும் புதியவகையில் சிந்தித்து
செயல்படக்கூடிய தலைவர்களையும் உருவாக்க முடியும். ஏனெனில் உலகில் சுமார் 250மில்லியன்
மக்கள் உணவிற்காக வாடும் சூழலில் மாதத்திற்கு ஒரு மில்லியன் வீதம் வேலைவாய்ப்பினை உண்டாக்கினால்
மட்டுமே வரக்கூடிய 15 வருடங்களில் நிலையான மாற்றத்தினை அடையமுடியும் என்று முதுமுனைவர் பட்டம்பெற்ற சுனில் கந்த் முஞ்சால்
கூறினார்.
திரு. முஞ்சால் அவர்கள், இந்தியத் தொழில் அதிபர்களுள் அனுபவ முதிர்ச்சி பெற்ற வல்லுநராகத்
திகழ்பவர். மேலும் தமது புதுமையான செயற்பாடுகளின் வாயிலாக, உலகளாவிய வணிகத்துறையில்
மிகவும் வெற்றிகரமான சாதனைகள் பல புரிந்த ஒரு நிறுவனமாக ஹீரோ குழுமத்தை முன்னேற்றிய
பெருமை அவருக்குண்டு. திரு. முஞ்சால் அவர்கள் ஒரு சிறந்த முற்போக்குச் சிந்தனையாளர்.
தமது சிறந்த கருத்துக்களாலும் புதுமையான திட்டங்களாலும் இந்தியாவின் மேம்பாட்டிற்காக
அரும்பணி ஆற்றியவர். இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சிக்கு அயராது உழைத்தவர். அரசும்
தொழில் துறையும் பயன்படும் வகையில் செயல்பட்டவர். மேலும், இந்தியாவின் தலைசிறந்த தொழில்
அதிபர்களுள் ஒருவர்.
வணிகத்திற்கும், தொழில் துறைக்கும் அப்பாற்பட்டுக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து,
இளைஞர்கள், இந்திய நாட்டை அறிவு வளர்ச்சியில் உலகளாவிய நிலையில் மேம்படச் செய்வார்கள்
என்கிற நம்பிக்கையுடன் அரும்பணி ஆற்றுபவர். அப்பணிக்காக எந்தவித இலாபத்தையும் எதிர்பார்க்காமல்,
கல்விச் சேவை செய்யும் ஒரே நோக்கோடு நிறுவப்பட்ட பிஎம்எல் கல்விக் குழுமத்தின் நிறுவனமான
பி.எம்.எல். முஞ்சால் பல்கலைக்கழகத்தின் வாயிலாகச், சிறந்த அறிவாற்றலையும், வழிகாட்டலையும்
வழங்கி இந்தியக் கல்விப்பணி எனும் வரைபடத்தில் தம் முத்திரையைப் பதித்த பெருமைக்குரியவர்.
டி.லிட். பட்டம் பெற்ற முனைவர் திரு. முஞ்சாலைப் பற்றி எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின்
துணைவேந்தர் பேரா. பிரபிர் பக்சி அவர்கள், ‘‘இந்தியாவின் தொழில் துறைக்கும் வணிகத்
துறைக்கும் மட்டுமின்றி சமூக- பொருளாதார முன்னேற்றத்திற்கும் பெருமளவில் உழைத்த பல்துறை
வல்லுநரான திரு. முஞ்சால் அவர்களுக்கு டி.லிட் பட்டம் வழங்குவதில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம்
பெருமைகொள்கிறது’’ என்று பாராட்டினார்.
இந்தச் சிறப்புமிகு பட்டமளிப்பு விழாவிற்குப் பல்கலைக்கழக நிறுவனரும் வேந்தருமான
முனைவர் தா.இரா. பாரிவேந்தர் அவர்கள் தலைமையேற்று பேசுகையில் உலகில் சிறந்து விளங்கக்கூடிய
தொழிலதிபர்களை மாணவர்களுக்கு இதுபோன்ற நிகழ்வுகளின் வாயிலாக அறிமுகப்படுத்துவது பெருமையானதொன்று.
இதனால் மாணவர்களிடையே உத்வேகமும் சாதிக்கவேண்டும் என்ற உணர்வும் மேம்படும் என்று கூறினார்.
0 comments:
Post a Comment