விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் நடந்த அகில உலக பார்க்கவன் நூற்றாண்டு விழா மற்றும் பார்க்கவ குல முன்னேற்ற சங்க ஆண்டு விழாவில், ஐ.ஜே.கே., நிறுவனர் பாரிவேந்தர் பேசினார்.
அவர், ‘’தமிழகத்தில் 47 ஜாதி சங்கங்கள் உள்ளன. இந்த ஜாதி சங்கங்களில், பார்க்கவ குல சங்கம் மட்டுமே நூற்றாண்டு விழா காண்கிறது. இதுபோன்ற மாநாட்டை எந்தக் கட்சியாலும் நடத்த முடியவில்லை.
நம் இனத்தவர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்த திருச்சியில் மாநாடு, உழவர் மாநாடு, மக்கள் மாநாடு, தற்போது நூற்றாண்டு மாநாடு என, லட்சக்கணக்கான மக்களைத் திரட்டி நடத்திக் காட்டினோம்.
இச்சமுதாய மக்கள் ஒன்றுபட்டு பெருமை சேர்க்க வேண்டும். நம் சமுதாய மக்களை மற்ற கட்சியினர் மதிப்பதில்லை. நீங்கள் முடிவெடுத்தால், மற்ற கட்சிகள் தேவையில்லை. இதற்காக ஐ.ஜே.கே., உள்ளது.
மற்ற சமுதாயத்தினர் எந்தக் கட்சியில் இருந்தாலும், சமுதாய உணர்வோடு என் ஜாதி, என் குலம் எனக் கூறி, தொடர்ந்து சமுதாய வேட்பாளருக்கு ஓட்டுப் போடுகின்றனர். அது போல் நம்மிடையே இல்லை.
அரசியலையும், ஜாதியையும் பிரிக்க முடியாது. ஜாதி ஒற்றுமையை வெளிப்படுத்தாவிட்டால், எதிர் காலத்தில் விலாசமும் கிடைக்காது. வரும் புதுக்கோட்டை இடைத்தேர்தல் மூலம், 3வது இடத்தில் இருந்த நாம், முதலிடம் பிடிப்போம். அங்கு நம் சமுதாய மக்கள், 80 சதவீதம் பேர் உள்ளனர். இந்த மாநாட்டின் வெற்றியே, புதுக்கோட்டையின் வெற்றியாக இருக்கும்.
நாம் யார் வம்புக்கும் போக மாட்டோம்; அடிதடிக்கும் போக மாட்டோம். நமக்கு என்று ஒரு சரித்திரம் இருக்கிறது. நாம் ஆண்ட பரம்பரையைச் சேர்ந்தவர்கள்; ஆளப் பிறந்தவர்கள். நம் மீது நம்பிக்கை வைத்துள்ளதால் ஊர் பாதுகாப்பவன், சக்தி படைத்தவன் என்கின்றனர். நாம் ஒற்றுமையாக இருந்தால் பதவிகள், மற்ற கட்சியினரை நாம் தேடிச் செல்லத் தேவையில்லை.
புதிய வரலாறு என் காலத்தில் ஏற்பட்டு இருக்கிறது என்றால், என் சமுதாய மக்கள் மீது, எனக்கு நம்பிக்கை வந்துள்ளது. புதுக்கோட்டையில் நிறுத்தப்படும் ஐ.ஜே.கே., வேட்பாளர் வெற்றி பெற, நம் இன இளைஞர்கள் புதுக்கோட்டையை முற்றுகையிட்டு, உழைக்க வேண்டும். அங்குள்ள நம் சமுதாய மக்களின் வீடுகளுக்குச் சென்று, ஓட்டுகளை சேகரிக்க வேண்டும்.
இந்த வெற்றி மூலம், மற்ற தேர்தலில் நாம் மிகப் பெரிய சக்தியாக உருவெடுப்போம். திருக்கோவிலூர் அடுத்த மணம்பூண்டியில், பார்க்கவ குல சங்கத்தைத் தோற்றுவித்த குமாரசாமி உடையாரின் நினைவாக, மணி மண்டபம் அமைக்கப்படும்’’என்று பேசினார்.